இயேசு கிறிஸ்து

மனிதரின் தேடல்:                                                                                 English
   தொடக்கத்தில் எல்லாம் வல்ல கடவுள் இந்த பிரபஞ்சம் முழுவதையும் படைத்துவிட்டு, உலகின் மக்களுக்கு தன்னை வெளிபடுத்துவதற்காக காத்திருந் தார். உலகம் பல்வேறு பரிணாம மாற்றங்களைக் கண்டது. அவற்றின் இறுதியில் மனித இனம் தோன்றியது. முற்காலத்தில் மனிதர்கள் முதலில் தோன்றியபோது, அவர்கள் இயற்கை நிகழ்வுகளைக் கண்டு பயந்தார்கள். இடியம் மழையும், நெருப்பும் புயலும் அவர்களுக்கு விநோதமானவையாகத் தோன்றின. மனிதர்கள் இயற்கையின் புதிர்களுக்கு விடை காண ஆவல் கொண்டனர்.
   மனித மனதில் எழுந்த கேள்விகளுக்கு, அவனது அறிவால் பதில் அளிக்க இயலவில்லை; ஆனால் உள்ளுணர்வு பதில் தந்தது. இயற்கை நிகழ்வுகளில் செயலாற்றுவது, அதற்கும் மேற்பட்ட ஓர் ஆற்றல் என்பதை மனிதர்கள் உணர்ந்தனர். சில மக்கள் இயற்கையின் ஒவ்வொரு ஆற்றலுக்கும் தனித்தனி தெய்வங்களை வணங்கினர்; மற்றும் சிலர் ஒரே கடவுளை வழிபட்டனர். பலி செலுத்தும் வழக்கமும் தோன்றியது. பிற்காலத்தில், மனிதர்கள் தெய்வங்களுக்கு பல்வேறு உருவங்களை ஏற்படுத்தினர். இருந்தாலும் சிலர் உருவம் இன்றியே ஒரே கடவுளை வழிபட்டனர்.

கடவுள் பற்றிய சிந்தனைகள்:
   பாவம், புண்ணியம் பற்றிய எண்ணங்கள் தோன்றியதால், கடவுளைப் பற்றிய பல சிந்தனைகளும் உருவாகின. மனிதரிடையே பலவித எதிர்பார்ப்புகள் தோன்றின. கடவுள் ஒரு மனிதராகப் பிறக்க வேண்டும், அவர் தனது போதனைகள் வழியாக மக்களை நல்வழிப்படுத்த வேண்டும், அவர் மக்களின் பாவங்களுக்கு பரிகார மாக தன்னையேப் பலியாக்க வேண்டும் என்ற எண்ணங்கள் மனித உள்ளங்களில் வேரூன்றின.
   "வாடுகின்ற பயிர் மழைக்காக காத்திருப்பது போன்று, மக்கள் அனைவரும் உன்னதரின் வருகைக்காக காத்திருக்கின்றனர்." - 'தேடுதல்' என்ற சீன நூல்.
   "கடவுளே தனது பெயரால் போதிக்க ஒருவரை அனுப்பாவிடில், மக்களை நல்ல ஒழுக்கத்தில் நிலைநிறுத்த உங்களால் முடியாது." - தத்துவ ஞானி பிளேட்டோ.
   "கடவுளே தோன்றி, உன் பாவங்களால் உண்டான தீமைகளை தன்மேல் ஏற்றுக் கொள்ளும்வரை இந்த சாபத்திற்கு முடிவிருக்கும் என எதிபார்க்காதே." - 'எஸ்கிலஸ்' என்ற கிரேக்க புராணம்.

இயேசுவைப் பற்றிய இறைவாக்குகள்:
   தன்னை பல்வேறு வகைகளிலும், பலவித உருவங்களிலும் தேடிய மனிதரின் முன் தோன்ற கடவுள் விரும்பினார். வரலாற்றில் தன்னை வெளிப்படுத்துவது கடவுளின் முன்குறிக்கப்பட்ட திட்டமாக இருந்தது. கடவுள், தன்னை ஆபிரகாமுக்கு உருவம் இல்லாத நிலையில் வெளிப்படுத்தி இஸ்ரயேலரை தனது சொந்த மக்களினமாக தேர்ந்துகொண்டார். அவர்கள் வழியாகவே தனது மீட்புத் திட்டத்தை செயல்படுத்த விரும்பினார். இறைமகன் இயேசுவின் வருகைக்காக அவர்களைத் தயார் செய்தார். இஸ்ரயேலின் இறைவாக்கினர்கள் கடவுள் மனிதராக பிறக்க இருந்ததை மக்களுக்கு முன்னறிவித்தனர்.
   "நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின் றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்." - மீக்கா 5:2.
   "ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற் றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர் 'இம்மானுவேல்' [கடவுள் நம்மோடு] என்று பெயரிடுவார்." - எசாயா 7:14.
   "ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும்." - எசாயா 9:6.
   "நான் உனக்கு அறிவு புகட்டுவேன்; நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டு வேன்; உன்னைக் கண்ணோக்கி, உனக்கு அறிவுரை கூறுவேன்." - திருப்பாடல் 32:8.
   "அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும்; காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்." - எசாயா 35:5-6.
   "அவர் தம்மையே சாவுக்கு கையளித்தார்; பலரின் பாவத்தைச் சுமந்தார்; கொடியோருக்காகப் பரிந்து பேசினார்." - எசாயா 53:12.

எதிர்பார்ப்புகளின் நிறைவு:
   மக்களின் எதிர்பார்ப்புகளையும் இறைவாக்கினர்களின் இறைவாக்குகளையும் நிறைவேற்றும் வகையில் இயேசு உலகிற்கு வந்தார். மனிதராக பிறந்த கடவுள், மக்களை நல்வழிப்படுத்தும் போதனைப் பணியை மூன்று ஆண்டுகள் செய்தார். பின்பு தன்னையே சிலுவையில் பலியாக கையளித்தார். தான் முன்னறிவித்த படியே இறந்த மூன்றாம் நாள் உயிர்தெழுந்தார். நாற்பது நாட்களாக தனது சீடர்களுக்கு பலமுறைத் தோன்றி அவர்களை உறுதிபடுத்தினார். அதன்பின் விண்ணகத்திற்கு சென்று தந்தையாகிய கடவுளின் வலது பக்கத்தில் மாட்சியுடன் வீற்றிருக்கிறார்.
   "பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்: இவர் வழியாக உலகங்களைப் படைத்தார். கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளி யாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமை மிக்க (தந்தையாம்) கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்." - எபிரேயர் 1:1-3.
   'பேதுரு கூறியது: "கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார். யூதரின் நாட்டுப் புறங்களிலும் எருசலேம் நகரிலும் அவர் செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள். மக்கள் அவரைச் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்றார்கள். ஆனால் கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார். ஆயினும் அனைத்து மக்களுக்கு மல்ல, சாட்சிகளாக கடவுள் முன் தேர்ந்து கொண்டவர்களுக்கு மட்டுமே, அவர் காட்சியளித்தார். இறந்த அவர் உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள். மேலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவ ராகக் கடவுளால் குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்குப் பறைசாற்றவும் சான்று பகரவும் அவர் எங்களுக்கு கட்டளையிட்டார்." - திருத்தூதர் பணிகள் 10:38-42.
   "இப்பொழுது, நீங்கள் தூயோராகவும் மாசற்றோராகவும் குறைச்சொல்லுக்கு ஆளா காதோராகவும் தம்முன் விளங்குமாறு ஊனுடல் எடுத்த தம் மகனது (சிலுவைச்) சாவின் வழியாக கடவுள் உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்." - கொலோசையர் 1:22.
   "சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள்." - 1 பேதுரு 2:24.
   "நாம் வாழ்வு பெறும் பொருட்டு கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்பு கொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது." - 1 யோவான் 4:9-10.

நம்பாதோரின் வாயிலிருந்து:
   "ஒருவர் கிறிஸ்தவ நம்பிக்கை இல்லாதவராக இருந்தாலும், சரியான வகையில் வாழ விரும்பினால் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி வாழ முயல்வதே சிறந்ததாக இருக்கும்." - ஜான் ஸ்டூவர்ட் மில் (கி.பி.1806-1873).
   "இயேசு கிறிஸ்துவின் வெற்றி மாபெரும் வெற்றி; இது எவ்வாறு நிகழ்ந்தது என்பதைப் புரிந்துகொள்வது கடினம்." - எச்.எல். மென்கன் (கி.பி.1880-1956).
   "சாக்ரடீசின் வாழ்வையும் முடிவையும் ஒரு ஞானியின் வாழ்வும் முடிவும் என்று கூறினால், இயேசுவின் வாழ்வையும் மரணத்தையும் கடவுளின் வாழ்வும் மரணமும் என்று தயங்காமல் கூறலாம்." - ரூஸ்ஸோ (கி.பி.1712-1778).
   "எனக்கு மனிதர்களை நன்றாகத் தெரியும். இயேசு கிறிஸ்து மனிதர்கள் அனை வரையும்விட மேலானவர். அவர் தனது மரணத்திலேயே தன் வெற்றியை எதிர் பார்த்து காத்திருந்தார். ஒரு சாதாரண மனிதன் இப்படிதான் செய்வானா? அவரது ஞானமுள்ள போதனைகள், அவருடைய ஆன்மீக அரசாட்சி, மற்றும் அவரின் மகிமை ஆகியவை எனக்கு மறை பொருளாகவே இருக்கின்றன. எனவே, இயேசு கிறிஸ்து உண்மையாகவே கடவுள் என்ற உறுதியான முடிவுக்கு வருகிறேன்." - மாவீரன் நெப்போலியன் (கி.பி.1769-1821).
அவமானம் இன்றி, புகழ் இல்லை!
இறப்பு இன்றி, உயிர்ப்பு இல்லை!
சிலுவை இன்றி, மீட்பு இல்லை!