Sunday, March 4, 2012

மார்ச் 4, 2012

எப்பொழுதும் மறையாத ஒளி இயேசுவே! - திருத்தந்தை

   ரோமின் புனித ஜான் பாப்டிஸ்ட் தெ லா சால் பங்கு ஆலயத்திற்கு சென்று அங்கு திருப்பலி நிறைவேற்றி இன்றைய நாளினைத் தொடங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அங்குள்ள சிறுவர் களிடம் இயேசுவைப் பற்றியும், அவரது சொல், செயல் பற்றியும், அவர் அனுபவித்த வேதனைகள் பற்றியும் அறிந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத் தார். மேலும், திருச்சபை மற்றும் திருவருட்சாத னங்கள் பற்றி கற்றுக்கொள்ளுமாறும் கூறினார்.
  வத்திக்கான் திரும்பியதும், தூய பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் கூடி யிருந்த மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இயேசுவின் உருமாற்றம் குறித்த இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை விளக்கினார்.
   கடந்தவாரம் இயேசுவோடு பாலைநிலத்தில் நடந்து சோதனைகளை வெற்றி கொள்ள அழைக்கப்பட்ட நாம், இவ்வாரத்தில் அவரோடு இணைந்து மலையிலேறி செபிக்க அழைக்கப்படுகிறோம். இயேசு திருத்தூதர்கள் முன்பு உருமாறிய பொழுது, அங்கு முக்கியமாக இருந்தவை ஒளியும் குரலுமே; அதாவது இயேசுவின் முகத்தில் ஒளிர்ந்த தெய்வீக ஒளியும், அவரோடு பேசிய விண்ணகத் தந்தையின் குரலும் ஆகும். நாமும் இயேசுவோடு இணைந்து செபத்தின் மலை நோக்கி ஏறிச்சென்று அவரின் மனித முகத்தில் இறைமகிமையைக் கண்டு தியானிப்போம்.
   இயேசு தன் சீடர்கள் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை அழைத்துக் கொண்டு ஓர் உயர்ந்த மலைக்குச் சென்று அவர்கள் முன் உருமாற்றம் அடைந்த போது அவருடைய ஆடைகள் வெள்ளை வெளேரென ஒளி வீசின. எலியாவும் மோசேயும் தோன்றி அவரோடு உரையாடினர். அப்போது மேகம் ஒன்று அவர்கள் மேல் நிழலிட, அம்மேகத்திலிருந்து, 'என் அன்பார்ந்த மகன் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்' என்ற குரல் ஒலித்தது. இக்குரல் இயேசுவுக்கான சாட்சியாக மட்டுமின்றி, இக்குரலுக்கு செவிமடுப்போருக்கு வழங்கப்படும் கட்டளையாகவும் இருக்கிறது. இயேசு தனது நண்பர்களையும் தன்னோடு மலைக்கு அழைத்துச் செல்கிறார். ஏனெனில் அவரில் வாழுகின்ற, மிகவும் நெருக்கமான இந்த ஒளியின் அனுபவத்தினை அவர்களுக்கு அளிக்க விரும்பினார். 
   இந்த நிகழ்வுக்கு பின், மலையிலிருந்து இறங்கி வரும்போது இயேசு தன் சீடர்களுடன், தான் அடைய வேண்டிய துன்பங்கள் குறித்து உரையாடினார். அவர் அடைந்த உருமாற்றத்தின் மறைபொருள் அவரது பணி வாழ்வின் நிறைவை நோக்கியதாக இருந்தது. அவரின் பாடுகள் மற்றும் மரணம் குறித்த சீடர்களின் மன இருளை, அவர்கள் முதலில் கண்ட ஒளி பிரகாசித்து அகற்ற வேண்டும் என இயேசு ஆவல் கொண்டார். அதனால் அவர் அவர்களது உள் ஒளியாக இருக்க முடியும்; மேலும், இருளின் தாக்குதல்களில் இருந்தும் அவர்களைப் பாதுகாக்க முடியும். நாமும் நம் வாழ்வின் துன்பச் சூழல்களை வெற்றிகொள்ள உள் ஒளி தேவைப் படுகிறது. இயேசுவே எப்பொழுதும் மறையாத ஒளியாக இருக்கிறார்.
   இறுதியாக ஆங்கிலத்திலும் வேறு பல மொழிகளிலும் பேசிய திருத்தந்தை, தவக்காலத்தில் மேற்கொள்ளப்படும் தியாகச் செயல்கள் கிறிஸ்துவின் ஒளியைப் புதுப்பிக்கும் அனுபவத்துக்கு மக்களை வழிநடத்திச் செல்லும் என்று தான் நம்புவ தாக குறிப்பிட்டார்.